Friday, June 3, 2016

பாரம்பரிய தானிய உணவு

 ‘அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே! உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப் பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது”
 நம்மாழ்வார்.

நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிக உயர்ந்தது. நம் மரபு முறை உணவுகள், வெறும் பசியை போக்குவதாக மட்டுமல்லாமல், நமக்கு ஆற்றல் தருபவையாகவும் அரு மருந்தாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றன.

ஏழைகளின் உணவாக இருந்த தினை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவை இன்று வசதியானவர்களின் உணவாக, வியாதியஸ்தர்கள் உண்ணும் உணவாக மாறிவிட்டன. நாளுக்கு நாள் அவற்றின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி குறைவாகவும் இருப்பதால்தான் இந்த நிலை. விவசாயிகள், பணப் பயிரை விவசாயம் செய்வதால், நமது  பாரம்பரிய உணவுகள் அழிந்துவருகின்றன.  ஆதித் தமிழர்களின் ஆரோக்கியமே, நமது சிறுதானிய உணவில்தான் அடங்கி  இருந்திருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறையினர் கேப்பைக்கூழ் உண்பதை கைவிடத்தொடங்கி அரிசி முதன்மையாக்கப்பட்டது.


அறிவியல் வளர்ச்சியால் நவீன மயமாகி வரும் உலகில், நாம் தற்போது சாப்பிடும் உணவு வகைகள் குறித்தும், நம் முன்னோர்கள் சாப்பிட்ட பாரம்பரிய தானிய உணவு வகைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் பல இடங்களில் உணவுத்திருவிழாக்கள் கூட தற்போது நடத்தப்படுகின்றன.

தமிழர் உணவு நீண்ட நெடிய மரபுடையது. இனக்குழுச் சமூகத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்கள் மெல்ல மெல்லத் தங்களது அடையாளத்தை இழக்கத் தொடங்கினர். குறிப்பாக, இயற்கை வாழ்வு, மொழி இழப்பு, இயந்திரப் பெருக்கம், உடலுழைப்பின்மையால் தமிழர்கள் இன்று மருந்தையே உணவாக உட்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். உணவே மருந்தாக இருந்த காலகட்டம் ஒழிந்து போய், இன்று மருந்தையே உணவாக உட்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது கேலிக்குரியதும் வேதனைக்குரியதுமாகும்.

பஜ்ஜி, போண்டா, வடை, பர்கர், பீட்சா, கேக், பன் போன்றவைகளை  தின்று கொண்டிருக்கின்ற மக்கள் தற்போது  தினை, சாமை, வரகு, கேழ்வரகு, கம்பு, சோளம், கடலையில் செய்யப்பட்டுள்ள புட்டு, லட்டு, அதரசம், கடலை உருண்டை போன்ற நொறுக்குத் தீனிகளைத்  தின்னத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

கல்லூரி மாணவர்கள் மெல்ல மெல்ல இயற்கை உணவுமுறைக்கு மாறினால் இயற்கை விவசாயம் குறித்த சிந்தனை மேலோங்கும். செயற்கை உரங்களினால் மலடு தட்டிப்போன நிலங்கள் உயிர் பெறும். மேலும்,  தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பாரம்பரிய உணவு விற்பனையகம் தொடங்கப்பட வேண்டும். இனி வரும் தலைமுறையினராவது தங்களது உணவு, உடல் ஆரோக்கியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கட்டும். தற்போது மறத்தமிழர் சேனை இயக்கத்தினர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு சிறுதானிய உணவுகளை வாரம் ஒருமுறையேனும் உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment